இலங்கையில் திரவ நிலை பானங்களுக்கான கட்டாய சர்க்கரை அளவு வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் அரசாங்கம் புதிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் உணவுச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தங்கள், அண்மையில் (ஜூன் 23) அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
நுகர்வோர் சர்க்கரையின் அளவை எளிதாக அடையாளம் காண்பதற்கான தற்போதைய வண்ணக் குறியீட்டு அளவீடுகள் மாற்றமின்றி அப்படியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
சிவப்பு நிறம்: 100 மில்லிலிட்டருக்கு 8 கிராமிற்கும் அதிகமான சர்க்கரை.
மஞ்சள்) நிறம்: 100 மில்லிலிட்டருக்கு 2.5 கிராம் முதல் 8 கிராம் வரையிலான சர்க்கரை.
பச்சை நிறம்: 100 மில்லிலிட்டருக்கு 2.5 கிராமிற்கும் குறைவான சர்க்கரை.
சாதாரண செவ்வக வடிவ லேபிளை ஒட்டுவதற்குப் போதிய இடவசதி இல்லாத கண்ணாடிப் போத்தல்களுக்கு (Glass bottles), மாற்று வடிவமாக ‘வட்ட வடிவ’ லேபிளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது புழக்கத்திலிருக்கும் பழைய கண்ணாடிப் போத்தல்களின் மூடிகளில் (Cap) இந்த வண்ணக் குறியீட்டைப் பொறிப்பதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படாமல், பிற உணவு உற்பத்திகளுக்காகவோ அல்லது மறுவிற்பனைக்காகவோ வர்த்தகங்களுக்கு இடையே (Business-to-Business) பரிமாற்றப்படும் உணவுப் பொருட்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
