நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (10) முற்பகல் 07.00 மணி முதல் நாளை (11) முற்பகல் 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான, அதேபோன்று காலியிலிருந்து மாத்தறை வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடலில் ஏற்படக்கூடிய இந்தச் சீரற்ற வானிலை காரணமாக, மறு அறிவித்தல் வரை குறிப்பிட்ட இந்தக் கடற்பரப்புகளுக்கு மீன்பிடி மற்றும் கடற்சார் நடவடிக்கைகளுக்காகச் செல்ல வேண்டாம் என மீனவ மற்றும் கடற்சார் சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

