பாலஸ்தீன பிராந்தியங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் வார்சென் அகபெகியன் ஷாஹின், ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய கிழக்கு தூதுவர் கிறிஸ்டோஃப் பிகாட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாட்டுத் தீர்வுக்கான ஆதரவு, காசாவில் உண்மையான போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றங்களை நிராகரித்தல் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடுகளுக்கு பாலஸ்தீன அமைச்சர் இதன்போது தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அதிகரித்து வரும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறைகள் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடியதுடன், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
மேலும், காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து எச்சரித்த ஷாஹின், அங்கு அவசரமாக உதவிகளை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
எந்தவொரு சர்வதேசக் கட்டமைப்பும் அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்படுத்துவதாக அமைய வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதையும் சர்வதேசப் பாதுகாப்பையும் அது உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், அனைத்துத் தரப்பினருக்கும் விதிக்கப்பட்ட தெளிவான காலக்கெடுவுக்குள் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
