நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து இன்று (20) புது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், தேசியத் தேர்வு முறையில் வெளிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை டெல்லி பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தினர்.
பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் சிதறி ஓடியதுடன், சிலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

