ஐரோப்பியக் கண்டத்தில் வீசி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிலான மோசமான காட்டுத்தீயை பிரான்ஸ் நாடு சந்ததித்து வருகிறது. அதேபோல், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் பகுதியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ, இதுவரை கண்டிராத மிகப்பெரிய இயற்கை சீற்றமாக உருவெடுத்துள்ளது. மாட்ரிட் நகருக்கு வெளியே சுமார் 770 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலப்பரப்பு இந்தத் தீயில் கருகிச் சாம்பலாகியுள்ளது
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஒயின் உற்பத்தி மண்டலமான பொர்டோ (Bordeaux) நகருக்கு அருகில் உள்ள ஜிரோண்ட் (Gironde) பகுதி, இக்காட்டுத்தீயால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெறும் நான்கு நாட்களுக்குள் பாரிஸ் நகரின் அளவை விட நான்கு மடங்கு பெரிய பரப்பளவை, அதாவது 420 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை இத்தீ அழித்து சாம்பலாக்கியுள்ளது.
தற்போது இந்தத் தீப்பிழம்பு பொர்டோ நகரின் தெற்கு எல்லைக்கு வெறும் 15 கிலோமீட்டர் தொலைவில் அச்சுறுத்தலாக நின்று கொண்டிருக்கிறது.
மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள பிரான்ஸின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic missiles), ராக்கெட் மோட்டார்கள் மற்றும் ஆபத்தான ரசாயனச் செயலாக்க மையங்கள் போன்ற முக்கிய ராணுவ மற்றும் தொழில்முறை மையங்களுக்கும் இக்காட்டுத்தீ பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

