ஜப்பானின் மிகயுயர்ந்த சிகரமான மவுண்ட் ஃபூஜி மலையில், 7 வயது சிறுவனை அவனது தந்தை தனியாக விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழை மற்றும் மூடுபனி நிறைந்த வானிலையில், கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அந்தச் சிறுவன் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்திருந்தபோது மீட்கப்பட்டுள்ளான்.
மலையேற்றத்தின் போது தனக்குக் களைப்பாக இருப்பதாக சிறுவன் கூறியதையடுத்து, அவனது 48 வயதான தந்தை “இங்கேயே காத்திரு” எனக் கூறிவிட்டு, தனது மூத்த மகனுடன் தொடர்ந்து மலையேறியுள்ளார்.
கூலிங் டிரிங்க் மற்றும் சிறிய நொறுக்குத் தீனியுடன் தனியாக அமர்ந்திருந்த அந்தச் சிறுவனைக் கண்ட மலைப் பாதை ஊழியர்கள், பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, 3 மணி நேரப் பயணத் தொலைவில் மலையின் மேல் பகுதியில் இருந்த தந்தையைக் கண்டுபிடித்த பொலிஸார், அவரை அழைத்து வந்து கண்டித்தனர்.
“மலையேற்றத்தைக் கைவிட வேண்டியிருந்தாலும், குழந்தையைத் தனியாக விட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என அதிகாரிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து, தந்தை தனது அவசரப் முடிவிற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
