ஈராக்கிய பாதுகாப்பு தூதுக்குழு சவூதி அரேபிய தலைநகர் ரியாத்திற்கு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக வருகை தந்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வ நலன்கள் குறித்து ஆலோசிப்பதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என அதிகாரப்பூர்வ ஈராக்கிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளை இலக்கு வைக்கும் தாக்குதல்களுக்கு ஈராக்கிய நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என ஈராக்கிய பிரதமர் அலி அல்-ஜைதி தெரிவித்த ஒரு வாரத்திற்குள் இந்த விஜயம் அமைந்துள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரின் போது, ஈரான ஆதரவு ஆயுதக் குழுக்கள் சவூதி அரேபியாவைக் குறிவைத்து அடிக்கடி ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வந்தன.
ஈராக்கிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி அலுவலகத்தின் பணிப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் அமீர் அல்-ஷம்மாரி தலைமையிலான இத்தூதுக்குழுவில், உளவுத்துறை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
சவூதி அரேபியாவைக் குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்கள், ட்ரோன் அச்சுறுத்தல்கள் மற்றும் எல்லைக் கடந்து பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

