அமெரிக்க பாதுகாப்புத் துறை, சீனா ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான அரிய வகை உலோகமான ஸ்கேண்டியம் அகழ்வாராய்ச்சிக்காக அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு 400 மில்லியன் டொலர் நிபந்தனையுடனான கடனுதவியை அறிவித்துள்ளது.
உலகின் முதலாவது முதன்மை ஸ்கேண்டியம் சுரங்கத்தை அமைப்பதற்காகவே அவுஸ்திரேலியாவின் சன்ரைஸ் எனர்ஜி மெட்டல்ஸ் நிறுவனத்திற்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள சைர்ஸ்டன் திட்டத்தின் மூலம் மேலைநாடுகளுக்கான ஸ்கேண்டியம் விநியோகத்தை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விண்வெளி, பாதுகாப்பு, 5G/6G தொழில்நுட்பம் மற்றும் தரவு மையங்களுக்கு அத்தியாவசியமான இந்த உலோகம், அலுமினியத்தை வலுப்படுத்தவும் வெப்பத்தை தாங்கவும் பயன்படுத்தப்படுகிறது.
சீனா கடந்த ஆண்டு பாதுகாப்பு தயாரிப்புகளுக்கான ஸ்கேண்டியம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்ததைத் தொடர்ந்தே, அமெரிக்கா மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியது.
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஸ்கேண்டியத்தில் 25 சதவீதத்தை முதற்கட்டமாக 5 ஆண்டுகளுக்கு வாங்குவதற்கு அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும் அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் மின்கலத் திட்டங்களில் அமெரிக்க அரசு 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்

