யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவத்தினரின் நிதியுதவியுடன் புதிய வீடு ஒன்றைக் கட்டி வழங்குவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.

இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வரும் தமிழ் இராணுவ வீரரான லான்ஸ் கோப்ரல் எம்.ஆர். ராஜா என்பவருக்காகவே இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இராணுவத்தின் ‘சேவா வனிதா’ திட்டத்தின் கீழ், 1.5 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வீடு கட்டப்படவுள்ளது. அனைத்துக் கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி இந்த வீடு அவரிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் மங்கல நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, கோப்பாய் பிரதேச செயலாளர், உயர் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


