உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை – கல்வி அமைச்சு அறிவிப்பு

0
4

கொழும்பு: 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (A/L) மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு தெளிவான விளக்கமொன்றை அளித்துள்ளது. திட்டமிட்டபடி பரீட்சையை நடாத்துவதற்குப் போதிய கால அவகாசம் உள்ளதால், அதனை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின்படி, உயர்தரப் பாடத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு 300 நாட்கள் தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், 2026 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள முதற்தடவை மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை மொத்தம் 343 பாடசாலை நாட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இது தேவையான நாட்களை விட அதிகமாகும்.

2ஆம், 3ஆம் தடவை பரீட்சார்த்திகளுக்கான கால அவகாசம்

அதேவேளை, இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் போதிய கால அவகாசம் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து, இம்முறை பரீட்சை ஆரம்பமாகும் நாள் வரையில் அவர்களுக்கு 4 மாதங்களும் 10 நாட்களும் இடைவெளி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், திட்டமிட்டபடி  2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் என்றும், அதனை ஒத்திவைக்க எவ்வித காரணமும் இல்லை என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here