ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிலான வரலாறு காணாத பொருளாதாரப் போர் முன்னெடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், இது தொடர்பில் புதிய நிர்வாக உத்தரவுகளோ அல்லது இலக்கு வைக்கப்படும் குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலோ இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஈரானுடன் வர்த்தக உறவைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு எதிராக 25 சதவீத சுங்க வரியை விதிக்கும் நிர்வாக உத்தரவு கடந்த பெப்ரவரி மாதமே கையெழுத்தாகியுள்ளது.
ஈரானின் வர்த்தகக் கட்டமைப்போடு தொடர்புடைய நாடுகளைத் தனிமைப்படுத்தும் வகையில் அமெரிக்க நிதி அமைச்சு மேலதிகக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளது.
இந்த நடவடிக்கை குறிப்பிட்ட நாடுகளை மட்டுமன்றி, ஈரானுடன் தொடர்புடைய துறைமுகங்கள், விமான நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சரக்குக் கப்பல்களையும் இலக்கு வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணையில் விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படை முற்றுகையுடன் இணைந்து, ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

