இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தம் பலவீனமானது என்றும், இதனால் லெபனானில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் எந்நேரமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் ஆயுதப் படைகளின் தலைமைப் அதிகாரி ஏயல் ஜமீர் தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனான் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றிய அவர், அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கும், தேவைப்படின் உடனடியாகத் தாக்குதல்களைத் தொடுப்பதற்கும் படையினர் தயார்நிலையில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏயல் ஜமீர் மேலும் கூறியுள்ளதாவது “ஹிஸ்புல்லா அமைப்பு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அவர்கள் மீண்டும் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கும், எங்களது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் ஈரான் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் போது, லெபனான் மீதான போரை நிறுத்தி, தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றுமாறு ஈரான் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

