மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த தோல்வியைத் தொடர்ந்து, இலங்கை அணியின் சமரி அத்தபத்து தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மிகவும் உருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
தனது 18 ஆண்டுகால சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், அணியை ஒரு உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு கூட வழிநடத்த முடியாமல் போனது தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம் என 36 வயதான சமரி அத்தபத்து ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “தனிப்பட்ட முறையில் நான் பல விஷயங்களைச் சாதித்திருந்தாலும், ஒரு அணித்தலைவியாக நான் தோல்வியடைந்துவிட்டேன் என்றே நினைக்கிறேன்.
ஒரு வீராங்கனைக்கு இதுவே மிகப்பெரிய வலியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இப்போட்டியில் தான் வெறும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததே தோல்விக்கு முக்கியக் காரணம் எனப் பொறுப்பேற்றுக் கொண்ட அவர், இதற்காகத் தனது சக வீராங்கனைகள் மீது பழி சுமத்த விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்துப் பேசிய சமரி அத்தபத்து, இந்த உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், தனது உடற்தகுதி மற்றும் அணியின் தேவையைப் பொறுத்தே அது அமையும் என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், இலங்கை அணி இன்னும் அரையிறுதி வாய்ப்பை முழுமையாக இழந்துவிடவில்லை.
அடுத்து வரவிருக்கும் அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டியதுடன், ஏனைய அணிகளின் போட்டி முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

