அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி ஒப்பந்தத்தைப் பாதுகாக்குமாறு உலகத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ள கொலம்பியா ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ, லெபனான் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உலக நாடுகள் அனைத்தும் மதிக்க வேண்டும் என ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு ஜூன் மாதத்தில் கொலம்பியா நாடு ஐநா பாதுகாப்புச் சபையின் (UN Security Council) தலைமைப் பொறுப்பை வகிக்கும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த மனிதகுலமும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை ‘வாழ்க்கை மற்றும் அமைதிக்கான உடன்படிக்கை’ என வர்ணித்துள்ள அவர், இஸ்ரேலிய மக்கள் தங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, அண்டை நாடுகளை எதிரிகளாகப் பார்க்காமல் உடன்பிறப்புகளாகக் கருதி தாக்குதல்களை நிறுத்தச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

