சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாங்கூர், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
தனது முதலாளியால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதப்படும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அத்திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புலனாய்வுத் தகவல்கள், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவியுள்ளன.
சந்தேகநபரைத் தவிர, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இல்லாத காரணத்தினால் 21 முதல் 51 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கலாக மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊடக அறிக்கைகளின்படி, மனிதக் கடத்தல் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பணமோசடி தடுப்புப் பிரிவு (AMLA) ஆகியவற்றின் புலனாய்வு மற்றும் பொதுமக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே 38 வயதுடைய இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

