பொசன் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு மத்திய பிரிவில் ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
அனுராதபுரம் அட்டாஸ்தானம், மிஹிந்தலை மற்றும் தந்திர்மலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச பொசன் பண்டிகையுடன் இணைந்து, கொழும்பிலும் இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, கொம்பனித் தெரு, கோட்டை, மருதானை, மாளிகாவத்தை மற்றும் ஆட்டுப்பட்டித் தெரு ஆகிய காவல்துறைப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொசன் வலயம் அமைக்கப்படவுள்ளது.
அங்கு மூன்று பக்திப் பாடல்கள் நிகழ்ச்சிகள், 70 வெசாக் கூண்டுத் திரையிடல்கள் மற்றும் நான்கு தானசாலங்கள் இடம்பெறவுள்ளன. இதற்காகப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், முதன்முறையாக, லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திலிருந்து காவல்துறையின் தலைமையகம் வரையான வீதியில், ஜூன் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் சாரணர் சங்கத்தினால் ‘சாரணர் பொசன் வலயம்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் பிரதான வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக, போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

