சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஊடாக பெண்களை இலக்கு வைத்து நடத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள், பணப் பறிப்பு மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு விசேட விழிப்புணர்வு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
மோசடி நபர்கள் திருமணம் செய்து கொள்வதாகப் போலி வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றுவதுடன், உணவு அல்லது பானங்களில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்வதும், அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
காதலர்களாக நடித்து நம்பிக்கையைப் பெற்று, பணத்தைப் பறித்துவிட்டு இறுதியாகக் கொலையில் முடிந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த நிலைமை குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ள காவல்துறை, ஆபத்துக்குள்ளாகக்கூடிய நபர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுமாறு அனைத்துக் காவல்துறை நிலையங்கள், புலனாய்வு மற்றும் சிவில் அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இணையம் மூலம் அறிமுகமாகும் அடையாளம் தெரியாத நபர்களை நம்பி பணம், நகைகள் அல்லது சொத்துக்களை வழங்க வேண்டாம்.
உங்களது அந்தரங்கமான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை எக்காரணம் கொண்டும் அந்நியர்களுக்கு அனுப்பக் கூடாது.
தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் முகவரி போன்ற ரகசியத் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு அல்லது அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்திற்கு அல்லது சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் 118, 119, 107, 109 ஆகிய அவசரத் தொலைபேசி இலக்கங்கள் மூலமும் காவல்துறையினரைத் தொடர்புகொள்ள முடியும்.

