அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர் வழக்கத்தை விட சீக்கிரமாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
பொதுவாக மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்கும்.
ஆனால், மே மாதத்தின் கடுமையான வெயில் மற்றும் திடீரென பெய்யும் முன்கூட்டிய பருவமழை ஆகியவை வீரர்களையும், ரசிகர்களையும் பெரும் அவதிக்குள்ளாக்குகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை மார்ச் 10-ஆம் திகதி தொடங்கி, மே 15-ஆம் திகதிக்குள் Play off மற்றும் இறுதிப்போட்டிகளுடன் முடித்துவிட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இதற்காக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை மார்ச் 10-க்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 3 வரை இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடக்கிறது.
இதனையடுத்து மார்ச் 11 முதல் 15 வரை இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா வீரர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 150-வது ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.
இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஆரம்பத்திலேயே ஐபிஎல் தொடரில் இணைவதில் சிக்கல் ஏற்படலாம்.
அத்துடன் வெளிநாட்டு வீரர்களின் சர்வதேச போட்டிகள் மற்றும் பிற நாடுகளின் கிரிக்கெட் அட்டவணையை பாதிக்காத வகையில், தற்போதைக்கு 74 போட்டிகள் கொண்ட இதே சுழற்சி முறையே தொடரும் என்று பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா கூறியுள்ளார்.

