உள்நாட்டுத் தொழில்களை பலப்படுத்தும் அதேவேளையில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய நுகர்பொருட்களை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சமாசம் (COOPFED), லங்கா சுகர் (Lanka Sugar Company) மற்றும் பி.சி.சி லங்கா (BCC Lanka Company) ஆகிய நிறுவனங்களுடன் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டுள்ளது. அண்மையில் நாரஹேன்பிட்டியிலுள்ள கைத்தொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, கூட்டுறவு இயக்கத்தின் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுவதுடன், இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரப் பொருட்கள் நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், லங்கா சுகர் நிறுவனம் மாதத்திற்கு 1,000 மெட்ரிக் தொன் சிகப்புச் சர்க்கரையை விநியோகிக்கவுள்ளதுடன், பி.சி.சி லங்கா நிறுவனம் மாதத்திற்கு 20,000 லீட்டர் போத்தல்களில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், சோப் மற்றும் ஏனைய உள்நாட்டு தயாரிப்புகளை வழங்கவுள்ளது.

இந்தப் பொருட்கள் நாடு முழுவதிலும் உள்ள 75 நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக, 3,500 க்கும் மேற்பட்ட பிரதேச கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும்.
தேவையற்ற இடைத்தரகர்களைத் தவிர்ப்பதன் மூலம் சந்தை விலையை நிலையாக வைத்திருக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான பொருட்களை வழங்கவும் கூட்டுறவு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தற்போதுள்ள 3,500 விற்பனை நிலையங்களை 2029 ஆம் ஆண்டிற்குள் 10,000 ஆக உயர்த்துவதற்கு COOPFED திட்டமிட்டுள்ளதுடன், இந்திய கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து உயர்தரப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீண்டகால நம்பகத்தன்மை மற்றும் நிலையான வணிக நடைமுறைகளுடன் இயங்கி வரும் COOPFED, உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து சந்தை ஏகபோகத்தைக் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளிலும்கூட ஐந்து பேரில் ஒருவர் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினராக உள்ளதாகக் குறிப்பிட்டார். உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்துவதில் கூட்டுறவுச் சங்கங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், கூட்டுறவு கட்டமைப்பை ஒரு முழுமையான பொருளாதார அமைப்பாக (Ecosystem) உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் (SMEs) தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டு வருவதற்கு வலுவான தளத்தை அமைக்கும் வகையில் கூட்டுறவு வங்கி அமைப்பை வலுப்படுத்த நிதி அமைச்சும் வர்த்தக அமைச்சும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, COOPFED தலைவர் கலாநிதி சாந்த ஜயரத்ன, முதன்மை நிறைவேற்று அதிகாரி ரோஷணி பிரதீபா, பி.சி.சி லங்கா தலைவர் பிரசங்க இந்திரஜித், லங்கா சுகர் நிறுவனத்தின் தலைவர் வசந்த அதுல குமார மற்றும் அதன் பணிப்பாளரும் முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான தர்மவர்தன உதய குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


