இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கனவுகளுக்கு வலுவூட்டும் வகையில், ஜனாதிபதி நிதியத்தினால் “சரசவி திரியோ அபிமன்” என்ற விசேட கல்வி உதவி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில், எதிர்வரும் 11ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
நிதியுதவி: தகுதிபெறும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா கல்வி உதவித்தொகை இதன்போது வழங்கப்படும்.
பாராட்டு விழா: முதற்கட்டமாக 254 பல்கலைக்கழக மாணவர்கள் அலரி மாளிகை நிகழ்வில் பாராட்டப்படவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 400 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அடுத்த கட்டம்: கொழும்புக்கு வருவதில் உள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசின் நிலைப்பாடு: எந்தவொரு உடல்ரீதியான குறைகளும் கல்விக்குத் தடையாக அமையக்கூடாது என்பதை உறுதிப்படுத்தி, மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விச் சாதனைகளுக்கு தேசிய அங்கீகாரம் வழங்குவதே இச்சமூக வலுவூட்டல் திட்டத்தின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

