ரமல்லாவை மையமாகக் கொண்ட பாலஸ்தீன அதிகாரசபையின் வெளியுறவு அமைச்சர் வார்சென் அகபெக்கியான் ஷாஹின், மத்திய கிழக்கிற்கான பிரித்தானியாவின் புதிய இராஜாங்க அமைச்சர் ஸ்டீபன் டௌட்டியுடன் தொலைபேசி வழியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
காசாவின் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அதிகரித்துவரும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாகப் பாலஸ்தீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்குக்கரையில் தொடர்ந்து இடம்பெறும் சம்பவங்கள், குறிப்பாக “குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம் மற்றும் புனிதத் தலங்கள் மீதான தாக்குதல்கள்” குறித்து பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், காசாவின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பான சமீபத்திய ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் கவலைகளுக்கு ஆதரவளித்ததற்காக பிரித்தானியாவிற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது, பாலஸ்தீன அரசுக்கு அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிக்க பிரித்தானியா உறுதியுடன் இருப்பதாக பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் ஸ்டீபன் டௌட்டி மீள உறுதிப்படுத்தினார்.
