ஜனனம் அறக்கட்டளையின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” செயற்திட்டத்தின் கீழ், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாபெரும் இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு கொழும்பு 14, மாவத்தையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தமிழ் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

கலாநிதி வி. ஜனகன் அவர்களின் சிறப்பான எண்ணக்கருவில் உருவான இக்கருத்தரங்கில், வட கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

சிறப்புப் பரிசுகளும் ஊக்க உரையும்
கருத்தரங்கின் நிறைவில் நடைபெற்ற வினா-விடை நிகழ்ச்சியில் திறம்பட பதிலளித்த மாணவர்களுக்குப் பாராட்டுச் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி. ஜனகன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, அவர்களின் எதிர்காலக் கல்விக்கான ஊக்க உரையாற்றினார்.

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஜனனம் அறக்கட்டளையின் வட கொழும்புப் பிராந்திய நிர்வாகிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஜனனம் அறக்கட்டளையின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” செயற்திட்டம், நாடு முழுவதும் பல ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சேவைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


