எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த விசேட அமைச்சரவை உப குழு மற்றும் அதிகாரிகளின் குழுக்கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காலத்தில் குடிநீர், விவசாய நீர், மின்சாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
நீர்த்தேக்கங்கள் முழுமையாக வற்றுவதற்கு முன்பாகவே, நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் முறையான விநியோகத் திட்டங்களை மக்களுடன் இணைந்து முன்கூட்டியே செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வரவிருக்கும் பெரும் போகத்திற்கான விதை நெல் மற்றும் உரங்களை தடையின்றி வழங்கவும், ஒக்டோபர் மழைநீரைப் பயன்படுத்தி நிலங்களை தயார்படுத்தவும் ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகள், நன்னீர் மீன்பிடிச் சமூகத்தினர் மற்றும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க விசேட திட்டங்களை மேற்கொள்ள அசாதாரண மேலாண்மை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும், வனவிலங்குகளுக்கான நீர் விநியோகம் மற்றும் பாசன அமைப்புகளின் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

