இலங்கை பல்கலைக்கழகங்களுக்கான டெங்கு கண்காணிப்பு மற்றும் தடுப்பு வழிகாட்டி வெளியீடு

0
4

இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிதல், நோயாளர்களை முறையாக நிர்வகித்தல், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பதற்கான முறையான வழிமுறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட “டெங்கு நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு தொடர்பான மருத்துவ மேலாண்மை மற்றும் தரநிலை வழிகாட்டி” வெளியீட்டு விழா 2026 இன்றைய தினம் (20) கொழும்பு 07, வார்ட் இடத்தில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தேசியப் பணியில் பல்கலைக்கழக சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டித் தொகுப்பை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உலக சுகாதார அமைப்பு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து உருவாக்கியுள்ளதுடன், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவப் பங்களிப்பும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க அவர்களினால், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன அவர்களிடம் இந்த வழிகாட்டி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

ஏற்கனவே பாடசாலைகள் மற்றும் பிரிவெனா கல்வி நிறுவனங்களுக்கு டெங்கு பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, நகரங்களைச் சார்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர் விடுதிகளைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நோய் கொத்தாகப் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதால், அதனைத் தடுப்பதற்கு இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வழிகாட்டித் தொகுப்பு பெரும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இது பல்கலைக்கழகங்களால் மட்டும் தனித்து வெற்றி கொள்ளக்கூடிய சவாலல்ல என்பதால், இதற்குப் புறம்பான சமூகத்தினதும் சுகாதாரத் துறையினரதும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க, இந்த வழிகாட்டித் தொகுப்பின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் சமூகத்திற்கு டெங்கு பரவலைத் தடுப்பது குறித்தும், நோய் பாதிப்பு ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய சரியான வழிமுறைகள் குறித்தும் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். அத்துடன், தேசிய அளவிலான டெங்கு ஒழிப்புத் திட்டங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்போது வழமை போல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக சுகாதார மத்திய நிலையத்தின் ஊடாக டெங்கு அறிகுறி உள்ள மாணவர்கள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அவர்களை வழிநடத்தும் வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஷ்ட பேராசிரியர் பூஜித விக்ரமசிங்க, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here