2026 ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான நாடாளுமன்ற அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெயரத்ன மற்றும் சபை முதல்வரின் செயலாளர் ஜனகாந்த சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்படி, ஆகஸ்ட் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அனுமதி பெறப்படவுள்ளதுடன், மாலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை எதிர்கட்சியினரால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை யோசனை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 19 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 11:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நிதிச் சட்டத்தின் கீழான பிரேரணைகளுக்கு அனுமதி பெறப்படவுள்ளதுடன், மாலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல வினாக்களுக்கான விடைகளைச் சமர்ப்பிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 20 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சட்டவிரோதமான முறையில் வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கும், அதற்கான தண்டப் பணத்தை அதிகரிப்பதற்குமான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கிய திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை எதிர்கட்சியின் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஆகஸ்ட் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை விவாதம் முழு நாளும் நடைபெறவுள்ளது.
மேலும், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் இந்நாட்களில், நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவருக்கு வினாக்களை எழுப்புவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடை எதிர்பார்க்கும் 40 வினாக்களைப் (ஒரு நாளைக்கு 10 வினாக்கள் வீதம்) சமர்ப்பிப்பதற்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு உரிய நேரத்தை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

