கொழும்பு புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினால் 15-வது வருடமாகவும் பாடசாலை மாணவர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் மற்றும் இலவச கருத்தரங்கு நிகழ்வு இன்றைய தினம் (12) கொழும்பு தெமட்டகொடை விபுலானந்தா கல்லூரியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் இந்த மாதிரி வினாத்தாள்கள், அச்சிடப்பட்டு மலையக மாணவர்கள் கல்வி பயிலும் 12 மாவட்டங்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து விண்ணப்பித்திருந்த பாடசாலைகளுக்கு இன்று முதல் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில், விபுலானந்த கல்லூரி மற்றும் அதனை அண்மித்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாதிரி வினாத்தாள்களை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டு தமது பாடசாலைகளுக்கான மாதிரி வினாத்தாள்களை பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு. சுரேஷ், பொருளாளர் திரு. சிவசங்கரன் மற்றும் மன்றத்தின் அமைப்பாளரும் பரீட்சைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு பொறுப்பாளருமான திரு. ஆனந்த ஜெயசேகரன் உட்பட மன்றத்தின் அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தன.

இந்நிகழ்வினை விபுலானந்த கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் செயலாளர் திரு. பிரகாஷ், உப தலைவர் திரு. சதீஷ்குமார் ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



