மேல் மாகாணத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் பெருகும் இடங்கள் அதிகளவில் காணப்படுவதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிகப் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, பொதுமக்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மேல் மாகாணத்தில் கொசுப்புழுக்கள் பெருகக்கூடிய இடங்கள் அதிகளவில் அடையாளங்காணப்பட்டுள்ளன. எனவே, இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, டெங்குவை முழுமையாக ஒழிப்பதற்காக நாம் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் ஒன்றிணைந்து, சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.”
மழைக்காலநிலையைத் தொடர்ந்து டெங்கு பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தங்கள் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சூழவுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத் துறையினர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

