ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் தமது நியமனச் சான்றுகளைக் கையளித்த புதுடெல்லியை தளமாகக் கொண்ட இலங்கைக்கான பிரூனை டாருஸ்சலாம் நாட்டின் புதிய உயர்ஸ்தானிகர் திருமதி சிதி அர்னிபரிசா பின்டி ஹாஜி முகமட் ஜைனி, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவை நேற்று மாலை (25) சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது ப்ரூனை சுல்தானின் அரியணை ஏறிய ஆண்டு நிறைவு விழா மற்றும் அதனுடன் இணைந்த கலாசார, சுற்றுலாத் திட்டங்கள் உள்ளிட்ட எதிர்வரும் விசேட நிகழ்வுகள் குறித்து உயர்ஸ்தானிகர் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
சுல்தானின் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ப்ரூனை சந்தையில் இலங்கைத் தேயிலைக்குப் பெரும் வரவேற்பு நிலவுவதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், ப்ரூனை அரசு அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், இலங்கையிலிருந்து அரிசியைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜாவும் கலந்துகொண்டார்.

