ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனமான ‘ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்’ (Jetstar Airways), மெல்போர்ன் நகரிலிருந்து இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) தனது கன்னிப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

மெல்போர்ன் நகரிலிருந்து இயக்கப்படும் 10-வது சர்வதேச விமானச் சேவையான இது, மெல்போர்ன் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமானச் சேவைகளை வழங்கவுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த இக்கன்னி விமானத்திற்கு ‘ஏர்போர்ட் & ஏவியேஷன் சர்வீசஸ் (ஸ்ரீலங்கா) பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தால் பாரம்பரிய நீர்த்தாரை (Water Cannon) மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலா வாரியத்தின் ஏற்பாட்டில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய “கண்டிய நடன” நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய சேவையை அதிகாரப்பூர்வமாகக் குறிக்கும் வகையில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இலங்கையை வந்தடைந்த பயணிகளுக்குத் தீவின் பாரம்பரிய விருந்தோம்பலுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, இலங்கை தேயிலை சபையின் (Sri Lanka Tea Board) அனுசரணையில் பிரத்யேக ‘சிலோன் டீ’ (Ceylon Tea) பாக்கெட்டுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இப்புதிய நேரடி விமானச் சேவை ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையிலான சுற்றுலா, வணிகம் மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


