இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
இச்சந்திப்பின் போது, ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தற்போதைய வாழ்வாதாரப் பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கை கடிதம் ஒன்றும் முதலமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சமஷ்டி அரசியல் தீர்வு: இலங்கையின் தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு, தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி (கூட்டாட்சி) அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச விசாரணை: ஈழத்தமிழர் இனவழிப்புக்கு நீதி கோரி, சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தமிழக-ஈழ மீனவர் பிரச்சினை: இந்திய மற்றும் ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களுக்கு இடையே நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அகதிகள் மறுவாழ்வு: இந்தியாவில் நீண்டகாலமாகத் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சந்திப்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் குழு:
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், ஏழு பேர் கொண்ட முக்கிய பிரதிநிதிகள் குழு இச்சந்திப்பில் கலந்துகொண்டது.
தமிழக முதலமைச்சருடனான இந்தச் சந்திப்பு, ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.


