நடப்பு சிறுபோகப் பயிர்ச்செய்கைக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியம், தகுதியுடைய 90 சதவீதமான விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள விவசாயிகளுக்கான உர மானியத் தொகையும் மிகக் கூடிய விரைவில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் என அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

30,000 ரூபாயாக உயர்த்தப்பட்ட மானியம்
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் கருத்திற் கொண்டு, அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியத் தொகை இந்த முறை 5,000 ரூபாயினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அதிகரிப்பின்படி ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் உர மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த உர மானியத் தொகையானது எவ்வித தவணைக் கட்டணங்களும் இன்றி, ஒரே தடவையில் (Single installment) விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

