கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் வான்படை வீரர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று (23) பயணி ஒருவரின் பை திருடப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயல்பாட்டு அறையின் சிசிடிவி கண்காணிப்பு முறைமை மூலம் இத்திருட்டு உடனுக்குடன் கண்டறியப்பட்டது.
அங்கு கடமையில் இருந்த இலங்கை வான்படை வீரர்கள் உடனடியாகச் செயற்பட்டு, சந்தேகநபரை அடையாளங் கண்டு பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த சிசிடிவி கண்காணிப்பு மையம், 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது.
மேலும், பயணிகளுக்குத் திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவு, விபத்துகள் அல்லது ஏனைய அவசர உதவிகள் தேவைப்படும் தருணங்களில் விரைந்து செயல்படவும் இந்த செயல்பாட்டு அறை வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
