இலங்கை டெஸ்ட் அணியில் மணிக்கு 140 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசக்கூடிய திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றாக்குறையாக இருப்பது குறித்து அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது அசித்த பெர்னாண்டோ மட்டுமே சீரான வேகத்தில் திறம்பட பந்துவீசி வருகிறார்.
அவருக்கு ஜோடியாக செயல்படும் லஹிரு குமார அடிக்கடி காயங்களால் அவதிப்படுவதும், 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போதிலும் அவரது சராசரி 36.38 ஆக மந்தமாக இருப்பதும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் மதீஷ பத்திரண போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் நாட்டில் இருந்தாலும், அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றனர்.
டெஸ்ட் அணிக்கு கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவது தொடர்பான தெளிவான திட்டங்கள் எதுவும் இதுவரை தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என்றும் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.
“சொந்த நாட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றக் கற்றுக்கொண்டால் மட்டுமே, உலகளவில் எந்த மைதானத்திலும் அவர்களால் சோபிக்க முடியும்” எனக் குறிப்பிட்ட அவர், அணி மேலதிக வெற்றிகளைப் பெற வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களின் ஆட்டத் திறனை இன்னும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

