மாகாண சபை தேர்தலும் மலையக பிரதிநிதித்துவமும்: ஜனாதிபதியை சந்தித்து பேசிய பின் ஜீவன் தொண்டமான் வெளியிட்ட தகவல்

0
4

நாடாளுமன்றத்திற்குள் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்ட ஒன்றியத்தின் சார்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் மற்றும் தாமும் இணைந்து ஜனாதிபதியை நேரில் சந்தித்து மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்பு திட்டங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இயற்கை அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ள நிலையில், மலையகத்தில் காணி மற்றும் வீடமைப்பு பிரச்சனை இன்னமும் இழுபறியாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது அரசாங்கத்தின் மீதான விமர்சனம் அல்ல என்றும், மாறாக நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு முறைமைச் சார்ந்த பிரச்சனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை முறைமை காரணமாக காணியை விடுவிப்பதில் பெரும் சிக்கல்கள் நிலவுவதுடன், காணியை விடுவித்தாலும் தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வீடமைப்பு முன்னுரிமை அளிக்கப்படும் என நிறுவனங்கள் நிபந்தனை விதிப்பதாக தெரிவித்துள்ள அவர், இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், மலையக வீடமைப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் நிதி போதுமானது அல்ல என்பதால், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த முறை ஒதுக்கப்பட்ட 7 பில்லியன் நிதியில் 67% இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி என்பதால், இலங்கை அரசாங்கத்தின் நேரடி நிதி ஒதுக்கீடு மலையகப் பகுதிகளுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காணி வழங்குவது சுலபமான காரியம் அல்ல என்றும், வளங்கள் மற்றும் மலையக சுற்றாடல் பாதுகாப்பு குறித்த சவால்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அக்கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும், மலையக மக்களுக்கு உறுதியான காணி உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

மேலும், மாகாண சபை என்பது தமிழர்களுக்கு மட்டுமேயான ஒரு விஷயம் அல்ல என்றும், அது இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் அவசியமான அதிகார பரவலாக்கத்தின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

13 மாவட்டங்களில் சிறுபான்மையாக (10% – 15%) வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு, தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் கீழேயே பிரதிநிதித்துவத்தைப் பெற முடிகிறது எனக் கூறிய அவர், தேர்தல் முறைமை மாற்றப்பட்டால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கும் அபாயம் உள்ளதால், புதிய அரசியலமைப்பு வரும் வரை பழைய தேர்தல் முறைமையிலேயே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு மற்றும் வரவேற்பு மிகவும் சுமுகமாக அமைந்த போதிலும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான நடைமுறை முடிவுகளை இனிவரும் காலங்களிலேயே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற ஜீவன் தொண்டமான் தனது பேட்டியில் நிறைவாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here