நாட்டில் HIV வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக விசேட வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர், இவர்களில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்தே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவர்களில் பெண்களை விட ஆண்களிடையே இத்தொற்று அதிகமாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதே HIV தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படலாம் எனக் கூறிய வைத்திய நிபுணர், இது தவிர பாதுகாப்பற்ற பாலியல் நடத்தைகள் மற்றும் போதைப்பொருள் ஊசி ஏற்றும் முறைகளின் போது ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பிற உபகரணங்களை ஒத்ததாகப் பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவையும் இதற்குப் பங்களிப்பதாகக் கூறினார்.
HIV வைரஸ் தொற்றிய பின்னர் அதனை 100% குணப்படுத்த முடியாது என்றும், ஒருவருக்கு HIV தொற்று ஏற்பட்டால் அவர் நீண்டகால மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

