யாழ்ப்பாணம்:
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான நிதியினை தற்போதைய அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன், அகழ்வின் பின்னரான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கும் நிதியுதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், இப்புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனித புதைகுழிப் பகுதியை நேற்று (19) நேரில் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“கடந்த கால அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றியது போன்று, எங்களுடைய அரசாங்கம் தமிழ் மக்களை ஒருபோதும் ஏமாற்றாது. எங்கள் அரசாங்கத்தை தமிழ் மக்கள் முழுமையாக நம்பலாம். செம்மணி புதைகுழி விவகாரத்தில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும். அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் நீதி அமைச்சு முன்னெடுக்கும்.
விசாரணைகளின் அடிப்படையில் நடவடிக்கை:
வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு இன்றி, குற்றம் செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்த அமைச்சர், எனினும் முறையான விசாரணைகள் இன்றி எவரையும் தன்னிச்சையாகக் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது என்றும் விளக்கமளித்தார்.
இராணுவத்தினர் இப்படுகொலைகளில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், நிச்சயமாக அவர்களுக்கு எதிராகவும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

